Tuesday, 26 May 2020

கண்காட்சி பாகம் - 4


மதியத்துக்கு மேல ஆகியும் முதல்வர், அந்தா வர்றார், இந்தா வர்றார்ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க. கொஞ்ச நேரத்துக்கு பொது மக்கள் யாருமே வரல, அப்போ முதல்வர் வந்துக்கிட்டு இருக்காருன்னு புரிஞ்சிது. ஒரு வழியா 2:45 போல, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் சூழ வந்து எல்லா காட்சியகங்களையும் பார்வையிட்டுட்டு கிளம்பினார்.


அவர் போன அடுத்த நொடி, வெளிய போகலாம்ன்னு கிளம்பினா, ஒட்டு மொத்த கூட்டமும் அங்கதான் கிளம்புச்சு. சரின்னு, கொஞ்ச நேரம் பொறுமையா தாகம் உட்பட பல சங்கதிகளையும் அடக்கிக்கிட்டு நின்னேன். வெளிய போற கூட்டம் கொஞ்சம் குறைய ஆரம்பிச்ச மாதிரி இருக்குன்னு கிளம்பப் பார்த்தா, இங்க காட்சியகத்துக்கு நிறைய பேர் வர ஆரம்பிச்சுட்டாங்க.


 என்ன டா இதுன்னு முழிச்சிக்கிட்டு இருக்கும் போது, “தம்பீ” அப்படின்னு அந்த உ.பொ வந்தாங்க. இப்போ என்ன சொல்ல போறங்களோன்னு யோசிக்கும் போதே, “தம்பீ, நீங்க போய் தண்ணியாவது குடிச்சிட்டு வாங்க, அது வரைக்கும் நான் பார்த்துக்குறேன்”னு சொன்னாங்க. நெகிழ்ந்து போய் ஒரு பெரிய நன்றி சொல்லிட்டு 4 பேரும் கிளம்பினோம்.


 வெளிய போய் சில முக்கிய கடமைகள முடிச்சிட்டு, சாப்பாடு வாங்க போனா அங்க பெரும் கூட்டம், அது போக ஒரு பெரிய ஆவின் பால் வண்டியில எல்லாருக்கும் மோர் குடுத்துட்டு இருந்தாங்க. சாப்பாடு வாங்க தெழுங்கு நண்பர்கள அனுப்பிட்டு, நாங்க மோர் வண்டிக்கு போனோம். சாப்பாடும் மோரும் வாங்கிக்கிட்டு வந்து அவசர அவசரமா சாப்பிட்டு முடிச்சோம்.


 மதியத்துக்கு மேல வழக்கமான வேலைகள்தான் ஓடுச்சு, உ.பொ எங்க கூடவே இருந்தும் கூட ‘கேள்விகள்’ எதுவும் கேட்கள. இன்னும் சொல்லப்போன அவங்களுக்கு இருந்த ‘மேலிடத்து அழுத்தங்கள்’ எல்லாம் குறைஞ்சு போய், எங்களுக்கு நிறையவே உதவியா இருந்தாங்க. சாயங்காலம் 6 மணி போல கண்காட்சி முடிஞ்சு கிளம்புனோம். வீட்டுக்கு போனதும் சரியான அசதி, வாங்குன சாப்பாட்ட கூட முழுசா சாப்பிடாம படுத்துட்டோம்.


 மறுநாள் 9 மணிக்கு ஆரம்பிச்ச கண்காட்சிக்கு சரியா 9:30க்கே போயிட்டோம். கிளம்புற வழியில ஒப்புட்டு சாப்பிடலாம்ன்னு ஆசையா போய், அதுவும் சூடா இல்லாம முதல் நாள் சுட்ட ஆறிப்போன ஒப்புட்ட சாப்பிட்டுட்டு போனோம். அன்னைக்கும் நல்லா கூட்டமாவே இருந்தது, பல ஊர்கள்ல இருந்து உழவர்கள் அவங்க சங்கங்கள் மூலமா வந்தாங்க, அதனால வேலையும் நிறையவே இருந்தது, நல்லாவும் போயிக்கிட்டு இருந்தது.


 11 மணி போல ஒரு குழு, எங்கள அழ வைக்கிறதுக்குன்னே அளவெடுத்து செஞ்ச மாதிரி வந்தாங்க. நிறைய கேள்விகள் கேட்டாங்க, ஆனா எல்லாமே வம்பிலுக்குற மாதிரியான கேள்விகள்தான். முதல் கேள்வியா “இதுக்கு எவ்வளவு மானியம்?”ன்னு கேட்டாங்க, நானும் “70 விழுக்காடுங்க”ன்னு சொன்னேன். உடனே “அப்போ அந்த மீதி 30 விழுக்காட யார் கட்டுறது?”ன்னு கேட்டாங்க, “அத நீங்கதாங்க கட்டனும்”ன்னு சொன்னேன். 


 “ஏன், அத நீங்க கட்ட மாட்டீங்களா?”ன்னு எங்கள பார்த்து கேட்க, புரிஞ்சு பேசுறாங்களா, இல்ல புரியாம பேசுறாங்களான்னு யோசிச்சிட்டு. “அத நாங்க எப்படி கட்ட முடியும்?”ன்னு கேட்டேன், அதுக்கு “சும்மா கட்டுங்க, என்ன இப்போ, எங்களுக்குதான கட்டுறிங்க”ன்னு சொன்னாங்க.


 ஏது ‘உங்களுக்குதான’வா?, அடப்பாவிகளா உங்க மூஞ்சியவே இப்பத்தானயா பார்க்குறேன். அடுத்த நொடி, வேற ஒருத்தர், “விடுங்க, எப்பவும் இப்படிதான் பேசுவாங்க”ன்னு சொல்லிட்டு, “சரி, இது இரவுல ஓடாதுல?”ன்னு கேட்டாங்க, நானும் ஓடாதுன்னு சொன்னேன். அடுத்ததா “இது சூரியன மேகம் மறைச்சாலும் ஓடுமா”ன்னு கேட்க, “அதெல்லாம் ஓடும்”ன்னு சொன்னேன். உடனே “அப்போ, இதுக்கு மேல நாம குடைய புடிச்சா இது ஓடாம நிக்குமா?”ன்னு கேட்க, நான் ஒரு மாதிரி பார்த்தேன்.

 

வசமா சிக்கிருக்கொம்ன்னு புரிஞ்சிது. ‘அதே’ மாதிரியான சில கேள்விகளுக்கு அப்பறம், “இத என்ன பண்ணா ஓடாம நிக்கும்”ன்னு கேட்க. பொறுமை இழந்து போய் “மொத்ததுக்கு அமத்தி போடுங்க, நின்னுடும்”ன்னேன். உடனே “அதுக்கு எதுக்கு இத நாங்க வாங்கனும்”ன்னு சொல்லி மொத்தமா சிரிக்க ஆரம்பிச்சுடாங்க. அவங்க எங்கள நக்களடிக்கிறாங்கன்னு பக்கத்துல இருந்த, தமிழ் தெரியாத தெழுங்கு நண்பருக்கு கூட புரிஞ்சிருச்சு.

 

கடைசியா ஒருத்தர் எங்கிட்ட “ஏங்க, இத வச்சு மழைய வரவழைக்க முடியுமா?”ன்னு கேட்டுட்டு, நான் பதில் சொல்லாம நிக்கிறத பார்த்து, கைய தட்டி சத்தமா சிரிச்சுக்கிட்டே, எங்கள அழ வச்ச மகிழ்ச்சியில அடுத்த காட்சியகத்துக்கு போயிட்டாங்க. ஆள விட்டா போதும்டா சாமின்னு ஆயிடிச்சு.

 

காலையில வந்தவங்களுக்கு நேர்மாறா, சாயங்காலம் போல வந்த ஒரு உழவருக்கு சூரிய மின்சக்தி பத்தி நிறையவே தெரிஞ்சு இருந்தது, அத பத்தி நிறைய சங்கதிகள மிகத் தெளிவா பேசுனார். எல்லாம் பேசிட்டு, போன வருடம் வரைக்கும் 90 விழுக்காடா இருந்த மானியத்த, இப்ப 70 விழுக்காடா குறைச்சதுக்கு, அரசாங்கத்தையும் ஆட்சியாளர்களையும் திட்டி தெருவுக்கு இழுத்தாரு.

 

அவங்கள மட்டும் இல்லாம பொதுப்படையா, மக்கள் எல்லாருக்கும் உழவுத்தொழில் பத்தியும், அதுல இப்போ உழவர்கள் சந்திக்கிற பிரச்சனைகள பத்தியும் பெருசா யோசனையோ, கவலையோ இல்லமா இருக்குன்னு திட்டுனாரு. 

 

அவர் கிளம்பும் போது சொன்ன வார்த்தைகள், “இப்படியே போனா, கொஞ்ச நாள் கழிச்சு எல்லாரும் காசியில இருக்க மாதிரி அகோரியா மாறி, பொனத்ததான் திங்க போறொம்”. என்னதான் அது கடுமையான வார்தைகளா இருந்தாலும், அவரோட குரல்ல இருந்த ஆற்றாமையும், அவர் புலம்புனதுல இருந்த உண்மையும், எதிர்காலத்த பத்தி ஒரு பயத்த ஏற்படுத்துது. 

 

அன்னைக்கான வேலை முடிஞ்சு கிளம்பும் போதும், அவரோட வரிகள யோசிச்சுகிட்டே போனேன், மனசு கனமாவே இருந்துச்சு. ஆனா, தங்கியிருந்த வீட்டுக்கு போனதும், கைபேசியில கொஞ்ச நேரத்துல வீட்டுகாரம்மா கூட ஒரு மொரட்டு சண்டை போட்டதுல எல்லாமே மறந்து போயிடிச்சு. ஆனா ஒன்னு, பொண்டாட்டி கூட சண்ட போடுறதும், பொடனியில செமத்தியா அடி வங்குறதும் ஒன்னு, கொஞ்ச நேரத்துல எல்லா சங்கதிகளும் மறந்து போயிடுது.

 

மூன்றாவது நாள் வழக்கம் போல கிளம்பிப் போனோம், (அன்னைக்கும் ஆறிப்போன ஒப்புட்டுதான் கிடைச்சுது). முதல் இரண்டு நாட்கள் மாதிரி, அன்னைக்கு பெருசா கூட்டம் எதுவும் இல்ல. நிறைய நேரம் சும்மா உட்காந்திருந்தோம், உண்மைய சொல்லப்போனா அன்னைக்குத்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்லா பேசிக்கிட்டோம்.

 

அப்படி அந்த ஐதிராபாத் நண்பர்கிட்ட பேசிக்கிட்டு இருக்கும் போதுதான் வியப்பின் உச்சிக்கே போனேன். அவர் மின்சார துறையில ‘M.tech’ முடிச்சிட்டு அடுத்ததா, முனைவர் பட்டத்துக்கு (PhD) படிக்க போறாராம். பார்க்கும் போது மிகவும் சாதாரணமான தோற்றத்துல இருந்ததுனால, அவர் இவ்வளவு படிச்சவரா இருப்பாருன்னு நினைக்கல. தற்குறி பய, நான் கெட்ட கேட்டுக்கு அந்த மூனு நாளும் அவ்வளவு மிடுக்கா, பகுமானமா, சுத்திக்கிட்டு இருந்தேன், சும்மாவா சொன்னாங்க ‘நிறைகுடம் தளும்பாது’ன்னு.

 

சரின்னு இன்னோரு நண்பரப் பத்தி தெரிஞ்சிக்கலாம்ன்னு அவர் கிட்ட பேசப்போனா, நாம பத்து வார்த்தை பேசுனா அவர் ஒரு வார்த்தைக் கூட பேசல. வந்ததுல இருந்து அவர் எதுக்குமே பெருசா அலட்டிக்கவும் இல்ல. அதிக பட்சமா சில செய்கைகள், அவசியம்ன்னா ஒன்னு இரண்டு வார்த்தை, அவ்வளவுதான்.

 

காலையில இருந்தத விட மதியம், கூட கொஞ்சம் கூட்டம் குறைவாதான் இருந்தது. வந்த கூட்டமும் சுத்து வட்டாரதுல உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான், அவங்களும் சுற்றுலா மனநிலையில சுத்திக்கிட்டு இருந்தாங்க. அதனால சீக்கிரமே எல்லா காட்சியகங்களும் எடுத்து வைக்க ஆரம்பிச்சுடாங்க. நாங்களும் வண்டிய வர சொல்லீட்டு, எல்லாத்தையும் எடுத்து வைக்க ஆரம்பிச்சிட்டோம்.

 

6 மணி போல கண்காட்சி நிறைவாகி, பங்கேற்றதுக்கான சான்றிதழும், நினைவு பரிசும் குடுத்தாங்க. அத வாங்கி, பகுமானமா புகைப்படம் எல்லாம் எடுத்துக்கிட்டு, பெருந்தன்மையோட ஐதிராபாத் நிறுவனதுக்கு குடுத்து விட்டோம். பின்னாடியே, “தம்பீ, ரொம்ப நன்றி பா, நான் கிளம்புறேன்”ன்னு சொல்லிட்டு அந்த உ.பொ.வும் கிளம்புனாங்க.

 

எல்லாத்தையும் கழட்டி வண்டியில எடுத்து வைக்கவே 8 மணி ஆயிடிச்சு. எடுத்து வச்சுட்டு, நாங்களும் பொருட்கள் ஏத்துன்ன வண்டியிலயே 7 கி.மீ. வண்டிக்குள்ள இடம் இல்லாம, வெளிய தொங்கிக்கிட்டே ஊர்ல போயி இறங்குனோம். அங்கிருந்தபடியே ஐதிராபாத் நண்பர்களுக்கும் விடை குடுத்து அனுப்பினோம்.

 

வீட்டுக்கு போய் எல்லாத்தையும் கொஞ்சம் பொறுமையா எடுத்து வச்சோம். முதல் நாள் எங்களுக்கு தங்க இடம் குடுத்தவர பார்த்து சொல்லிட்டு, வீட்டுக்கு சொந்தகாரர் கிட்ட போய் சாவிய குடுத்து, தற்காலிக வாடகை வீட்ட காலி பண்ணி கிளம்பினோம். கிளம்பும் போதும் அவர் 10 நிமிடம் பேசுனார், மதுரைக்கு வந்தா கூப்பிடுறதா சொன்னார். கண்டிப்பா கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு வந்தோம்.

 

தலைவாசல்ல பேருந்து புடிச்சு சேலம் போனோம். அங்க எங்களுக்குன்னே காத்திருந்த மாதிரி மதுரைக்கு ஒரு குளிர்சாதனப் பேருந்து கிளம்புச்சு. அதுல ஏறி காலையில 4 மணி போல மதுரை வந்து சேர்ந்தோம்.

 

இந்த பயணம் ஆரம்பத்தில இருந்தே ஒரு வித்தியாசமான பயணம். கடைசி நிமிடத்துல கிளம்பி, அதுவும் பல திருப்பங்கள சந்திச்சு, பல புதிய நபர்கள நண்பர்களா ஆக்கி, நிறைய சங்கதிகள கத்துக்குடுத்தது. 5 நாளும் நிறையவே கடினமான சூழ்நிலைகள் வந்தாலும் எல்லாத்தையும் சமாளிச்சு, வேகாத வெயில்ல நின்னு அந்த நிறுவனத்துக்கு உதவுனோம். இத்தனைக்கும் இதுக்காக அவங்கக்கிட்ட இருந்து சல்லிக்காசு கூட வாங்கல, எல்லாம் ஒரு தியாகம்தான.

 

இந்த தியாகம் எங்கள பெரிய இடத்துக்கு கொண்டு போகப் போகுது, இந்த கோடை காலம் முழுக்க அந்த நிறுவனத்து வேலைகள் முழுக்க முழுக்க இருக்க போகுது, நம்ம கையிலையும் கொஞ்சமாது காசு வரப் போகுதுன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா வந்துது என்னமோ கொரோனாவும், ஊரடங்கு உத்தரவும்தான்.

.முற்றும்.

1 comment:

  1. நன்றாக இருக்கிறது

    ReplyDelete